உலு சிலாங்கூர், சுங்கை பெர்னாம் ஆற்றில் பலத்த நீரோட்டத்தால் அடித்துச் செல்லப்பட்டு மாயமான 10 வயது சிறுவன் இன்று சடலமாக மீட்கப்பட்டான்.
முகமது ஆகிஃப் இம்ரான் என்ற அந்தச் சிறுவன், ஆற்றில் விழுந்ததாகக் கூறப்படும் இடத்தில் இருந்து சுமார் 300 மீட்டர் தொலைவில், இன்று மாலை 4.36 மணியளவில் சடலமாக கண்டெடுக்கப்பட்டான் என்று சிலாங்கூர் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை அதிகாரி முஸ்தகிம் ரிமோன் தெரிவித்தார். சுமார் 6 மீட்டர் ஆழமுள்ள ஆற்றுப் பகுதியில் தீயணைப்புப் படையின் முக்குளிப்போர், மூழ்கித் தேடியபோது, சிறுவனின் உடல் ஆற்றின் அடிப்பகுதியில் கண்டறியப்பட்டது.
நேற்று புதன்கிழமை பிற்பகல் 1.40 மணிக்கு இந்த விபத்து குறித்து அவசர அழைப்பு வந்தது. தொடர்ந்து இரண்டு நாட்களாக, மோப்ப நாய் பிரிவு , போலீசார், சுகாதார அமைச்சு மற்றும் சுல்தான் இட்ரிஸ் கல்விப் பல்கலைக்கழகப் பணியாளர்கள் எனப் பல ஏஜென்சிகள் இணைந்து தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். .








