சபா, கோத்தா கினபாலுவில் 13 வயது பள்ளி மாணவி ஒருவர், ஐந்து மாணவிகள் கொண்ட கும்பலால் தாக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தத் தாக்குதல் குறித்த காணொளி இணையத்தில் வைரலானதை அடுத்து இச்சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
பாதிக்கப்பட்ட மாணவி கொடுத்த புகாரின்படி, கடந்த மே 22 அன்று இந்தச் சம்பவம் நடந்துள்ளது. தாக்குதலுக்குப் பின், இதுகுறித்து யாரிடமும் கூறக் கூடாது என அச்சிறுமி மிரட்டப்பட்டுள்ளார். இதில் காயமடைந்த சிறுமிக்குத் தோள்பட்டை, கால்கள் மற்றும் காதுகளில் வீக்கமும் காயங்களும் ஏற்பட்டுள்ளன.
பாதிக்கப்பட்ட மாணவியும் குற்றம் சாட்டப்பட்ட ஐந்து மாணவிகளும் வெவ்வேறு பள்ளிகளைச் சேர்ந்தவர்கள் என்றும், அவர்கள் 'ஏஞ்சல்' என்ற வாட்ஸ்அப் குழு மூலம் பழகியவர்கள் என்றும் கூறப்பட்டுள்ளது. தவறான புரிதல் மற்றும் அதிருப்தி காரணமாக இந்தத் தாக்குதல் நடந்துள்ளது. இச்சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.








