கோலாலம்பூர், பிப்ரவரி.10-
அரசு மருத்துவமனை ஒன்றில், மரணப் படுக்கையில் இருப்பதாகச் சமூக ஊடகங்களில் பரவி வரும் கூற்றுக்களை சர்ச்சைக்குரிய சமய போதகரான டாக்டர் ஸாகிர் நாயக் மறுத்துள்ளார்.
அத்தகைய தகவல்கள் "ஆதாரமற்றவை" என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தனது நற்பெயருக்குக் களங்கம் ஏற்படுத்தும் நோக்கில் சில தரப்பினரால் பரப்பப்படும் அபத்தமான கூற்று என்றும் ஸாகிர் நாயக் அதனை விமர்சித்துள்ளார்.
தற்போது மலேசியாவில் வசித்து வரும் அவர், தனது வழக்கறிஞர் அக்பெர்டின் அப்துல் காடிர் மூலமாக இத்தகவலை வெளியிட்டுள்ளார்.
மேலும், ஸாகிர் நாயக், நல்ல ஆரோக்கியத்துடனும், உற்சாகத்துடனும் இருப்பதாக அக்பெர்டின் விவரித்துள்ளார்.
ஸாகிர் நாயக்கிற்கு எயிட்ஸ் நோய் என்றும், அவர் மரணப் படுக்கையில் இருப்பதாகவும் கடந்த சில மாதங்களாக சமூக ஊடகங்களில் பரவி வரும் தகவல்களுக்கு முற்றுப் புள்ளி வைக்கும் விதமாக ஸாகிர் தரப்பிலிருந்து மேற்கண்டவாறு விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.








