அலோர் காஜா, மே.05-
மலேசியாவின் வடக்கு-தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் தென்பாதையில், கிலோமீட்டர் 212 பகுதியில், நேற்று சுற்றுலா வேன் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து சாலையோரத்தில் கவிழ்ந்த விபத்தில், இந்தியாவைச் சேர்ந்த 8 பயணிகள் சிறிய காயங்களுக்கு உள்ளாகினர்.
காலை சுமார் 10.30 மணியளவில் இச்சம்பவம் நடந்ததில், அந்த வாகன ஓட்டுநர் போதைப்பொருள் பயன்படுத்தியிருந்தது உறுதிச் செய்யப்பட்டதைத் தொடர்ந்து கைது செய்யப்பட்டார்.
இந்த விபத்தில் 52 வயதான ஒருவரும், 13 மற்றும் 9 வயதுடைய இரு சிறுவர்களும் லேசான காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
விசாரணைக்கு உதவுவதற்காக, சம்பந்தப்பட்ட ஓட்டுநர் இன்று செவ்வாய்க்கிழமை அலோர் காஜா நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, அவரை நீதிமன்றக் காவலில் வைப்பதற்கான விண்ணப்பம் தாக்கல் செய்யப்படும் என்று அலோர் காஜா மாவட்ட போலீஸ் தலைவர் அஹ்மாட் அபு பாக்கார் தெரிவித்துள்ளார்.








