நாட்டிலேயே முதன்முறையாக கைதிகளுக்கான அங்கீகரிக்கப்பட்ட அடிப்படை உயிர்காக்கும் ஆதரவு பயிற்சி மற்றும் முதலுதவி பயிற்சியை வெற்றிகரமாக நடத்தியதற்காக, பத்து காஜா சீர்திருத்த மையம் மலேசிய சாதனை புத்தகத்தில் இடம் பிடித்து வரலாற்றுச் சாதனை படைத்துள்ளது. பத்து காஜா மருத்துவமனையுடன் இணைந்து கடந்த ஜூன் 24 அன்று நடத்தப்பட்ட இப்பயிற்சியில் 12 ஆண்கள், 30 பெண்கள் என மொத்தம் 42 கைதிகள் தேர்வு செய்யப்பட்டு, கோட்பாடு மற்றும் செய்முறைத் தேர்வுகளில் முழுமையாகத் தேர்ச்சி பெற்று அங்கீகரிக்கப்பட்ட பயிற்சியாளர்களாக உருவெடுத்துள்ளனர்.
சிறைச்சாலைக்குள் அவசரநிலைகளில் மற்ற கைதிகளுக்கு உடனடியாக உதவவும், விடுதலையான பிறகு சமூகத்தில் நல்ல குடிமக்களாக இணைந்து உயிர்களைக் காப்பாற்றவும் இந்தத் திட்டம் முன்னெடுக்கப்பட்டது என்று மையத்தின் இயக்குனர் எஸ். தனபால் மற்றும் பேரா மாநில சிறைத்துறை இயக்குநர் ஃபைரூஸ் அஹ்மத் ஆகியோர் தெரிவித்தனர்.
மருத்துவமனை இயக்குநர் டாக்டர் ஜெ. ஜெயகுமரன் மற்றும் டாக்டர் ஜெயந்திரன் குழுவினரின் வழிகாட்டுதலோடு வழங்கப்பட்ட இந்த சான்றிதழ்களில், கைதிகளின் எதிர்கால வேலைவாய்ப்பைக் கருத்தில்கொண்டு சிறைச்சாலையின் பெயர் குறிப்பிடப்படவில்லை.
இதனால் விடுதலையான பிறகு எந்தவித சமூக முத்திரையும் இல்லாமல் அவர்கள் வேலைவாய்ப்புகளுக்கு விண்ணப்பிக்க முடியும் என்று கூறப்பட்டுள்ளது. இந்த பயனுள்ள பயிற்சி தங்களுக்குப் புதிய வாழ்க்கையைத் தொடங்கவும், அவசர காலங்களில் குடும்பத்தினருக்கும் பொதுமக்களுக்கும் உதவவும் பெரும் நம்பிக்கையை அளித்துள்ளதாகப் பயிற்சியில் பங்கேற்ற கைதிகள் தங்களின் மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டனர்.













