போலீஸ் படைத் தலைவருக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட வேண்டும் என்று கூறி, முன்னாள் பாலர்பள்ளி ஆசிரியையான எம். இந்திரா காந்தி தொடுத்த வழக்கு மனுவை ஈப்போ உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
இந்திரா காந்தியின் முன்னாள் கணவர் முகமது ரித்வான் என்ற கே. பத்மநாதன் இருக்கும் இடம் குறித்த புதிய தகவல்கள் கிடைத்ததன் அடிப்படையில் போலீசார் ஏற்கனவே விசாரணையைத் தொடங்கிவிட்டனர் என்றும், அந்த விசாரணை இன்னும் நடந்து வருவதாகவும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. எனவே, நீதிமன்ற உத்தரவுகளை போலீசார் மதிக்கவில்லை அல்லது செயல்படுத்த மறுத்துவிட்டனர் என்று தற்போதைய நிலையில் முடிவு செய்ய முடியாது என்று நீதிபதி விளக்கியுள்ளார்.
பத்மநாதன் சாரா 100 மற்றும் புடி 95 மானியங்களைப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் ஆதாரங்கள், போலீசாருக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கையைத் தொடங்க போதுமானதாக இல்லை என்று நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது. இருப்பினும், பத்மநாதன்னைக் கைது செய்வதற்கான பிடிவாரண்ட்டை நிறைவேற்றவும், அதுகுறித்த அறிக்கையை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கவும் போலீசாருக்கு உள்ள கடமை தொடர்கிறது என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.










