கோலாலம்பூர், அக்டோபர் 07-
பிறந்து 18 நாட்களே ஆன ஆண் குழந்தை ஒன்றுக்கு பால் பாட்டிலில் சளிமருந்தைக் கலந்து கொடுத்து, துன்புறுத்திய குற்றத்திற்காக பணிப்பெண் ஒருவருக்கு கோலாலம்பூர் செஷன்ஸ் நீதிமன்றம் 8 ஆயிரம் வெள்ளி அபராதம் விதித்தது.
66 வயது ஹெவ் ஃபூங் சுன் என்ற அந்த பணிப்பெண், தனக்கு எதிரான குற்றத்தை ஒப்புக்கொண்டதைத் தொடர்ந்து நீதிபதி அஸ்ரோல் அப்துல்லா இந்த அபராதத்தை விதித்தார். அபராதத் தொகையை செலுத்தத் தவறினால் ஒன்பது மாத சிறைத் தண்டனையை விதிப்பதாக தமது தீர்ப்பில் தெரிவித்தார்.
அந்த பணிப்பெண் கடந்த செப்டம்பர் 15 ஆம் தேதி காலை 2.21 மணியளவில் கோலாலம்பூர் புக்கிட் ஜலீல்- பகுதியில் உள்ள ஒரு வீட்டில் இக்குற்றத்தை புரிந்ததாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
தனது குழந்தை, எந்த நேரமும் உறங்கிக்கொண்டு இருப்பதைக் கண்டு சந்தேகித்த அக்குழந்தையின் தாயார் , வீட்டில் பொருத்தப்பட்டுள்ள ரகசிய கேமரா பதிவை சோதனையிட்ட போது, அந்த பணிப்பெண், குழந்தைக்கு சளி மருந்தை கலந்து கொடுக்கும் காட்சி கண்டுபிடிக்கப்பட்டது.








