கோத்தா கினபாலு, பிப்ரவரி.16-
கோத்தா கினபாலு, இண்டா பெர்மாத்தாங் பகுதியில், கடந்த பிப்ரவரி 12-ஆம் தேதி, கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்ட பெண்ணின் எஞ்சிய இரண்டு உடல் பாகங்கள் கண்டறியப்பட்டதையடுத்து, இக்கொலை விசாரணையில் சந்தேக நபர்கள் நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இச்சம்பவத்தில், முதல் சந்தேக நபரான 71 வயது உள்ளூர் ஆடவர், சம்பவம் நடந்த அன்றே குயின் எலிசபெத் இரண்டு மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவில் தடுத்து வைக்கப்பட்டார்.
மேலும், அன்றைய இரவே செபங்கார் பகுதியில், 19 வயது ஆடவர் கைது செய்யப்பட்டார்.
அதனைத் தொடர்ந்து, இச்சம்பவம் தொடர்பாக மேலும் இரு பெண்களைப் போலீசார் நேற்று கைது செய்துள்ளதாக கோத்தா கினபாலு மாவட்ட போலீஸ் தலைவர் சையிட் லோட் சையிட் அப்துல் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.
29 மற்றும் 21 வயதுடைய அந்த இரு பெண்களும், இவ்வழக்கில் முக்கிய சந்தேக நபரின் பிள்ளைகள் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், அவர்களிடமிருந்து, செல்போன்கள், கையுறைகள், 27 அங்குல அளவுள்ள கத்தி உள்ளிட்ட பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.








