திட்டமிடப்பட்ட கணினிப் பராமரிப்புப் பணிகள் காரணமாக, நாடு முழுவதும் உள்ள 71 குடிநுழைவுத் துறை அலுவலகங்களில் கடப்பிதழ் சேவைகள் வரும் ஜூன் 26 முதல் கட்டம் கட்டமாகத் தற்காலிகமாகப் பாதிக்கப்படும் என்று மலேசியக் குடிநுழைவுத் துறை அறிவித்துள்ளது.
இந்த முதற்கட்ட பராமரிப்புப் பணியின் போது, புத்ராஜெயா தலைமையகம், ஜாலான் டூத்தா, சிலாங்கூர் கிளானா ஜெயா, மலாக்கா, ஜொகூர், பினாங்கு மற்றும் முக்கிய யூ.டி.சி. கிளைகளில் கடப்பிதழ் புதுப்பித்தல், அச்சிடுதல் மற்றும் 'மைஆன்லைன் கடப்பிதழ் ஆகிய சேவைகள் முழுமையாகச் செயல்படாது.
பொதுமக்கள் தங்களின் பயணத் திட்டங்களுக்கு ஏற்ப முன்கூட்டியே கடப்பிதழ் சேவைகளைப் பெற்றுக்கொள்ளுமாறும், பராமரிப்புப் பணிகள் நடைபெறும் கிளைகளின் முழுமையான விபரங்கள் அதிகாரப்பூர்வ சமூக ஊடகப் பக்கங்களில் சரிபார்த்துக் கொள்ளுமாறும் குடிநுழைவுத் துறை கேட்டுக்கொண்டுள்ளது.








