சிப்பாங், நவ. 16-
கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை விமானப் பணியாளருக்கும், பயணிக்கும் இடையில் ஏற்பட்ட மோதல் குறித்து போலீசார் தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.
இந்த மோதல் தொடர்பான காணொளி சமூக வலைத்தளங்களில் பரவலாக பகிரப்பட்டதைத் தொடர்ந்து இந்த தகராறுக்கான காரணத்தை கண்டறியும் பொருட்டு விசாரணை செய்யப்பட்டு வருவதாக கேஎல்ஐஏ போலீஸ் நிலையத் தலைவர் அஸ்மான் ஷாரியாட் தெரிவித்தார்.
கேஎல்ஐஏ முதலாவது முனையத்தில் நிகழ்ந்த இச்சம்பவத்தில் சொற்ப காயங்களுக்கு ஆளான விமானப் பணியாளர் ஒருவர் போலீசில் புகார் செய்து இருப்பதாக அவர் குறிப்பிட்டார்.
பயணிகளை விமான நிலையத்தற்குள் அனுமதிக்கும் முறையில் தாமதம் ஏற்பட்டதைத் தொடர்ந்து இந்த மோதல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
குற்றவியல் சட்டம் 323 பிரிவின் கீழ் விசாரணை செய்யப்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டார்.








