தெலுக் இந்தான், பெக்கான் பாரு பகுதியில் கடந்த ஏப்ரல் 17-ஆம் தேதி ஓர் இந்திய முதியவர் வீட்டின் முன்வாசலில் சரமாரியாக வெட்டிக் கொல்லப்பட்ட ஆயுதமேந்திய கொள்ளை சம்பவம் தொடர்பாக 4 சந்தேக நபர்களைப் போலீசார் கைது செய்துள்ளனர்.
20 முதல் 30 வயதுடைய நான்கு சந்தேக நபர்கள், , தெலுக் இந்தான் மற்றும் பகாங், பெந்தோங் பகுதிகளில் கைது செய்யப்பட்டனர் என்று ஹிலிர் பேராக் மாவட்ட போலீஸ் தலைவர் உதவி கமிஷனர் சுவா கோக் லியான் தெரிவித்தார்.
இந்த சம்பவத்தின் போது கொல்லப்பட்ட முதியவரின் வீட்டிலிருந்து கொள்ளையடிக்கப்பட்டு, அடகு வைக்கப்பட்ட 8 ஆயிரம் ரிங்கிட் வெள்ளி மதிப்பிலான நகைகள், வாகனங்கள் மற்றும் இரண்டு அரிவாள்கள் பறிமுதல் செய்யப்பட்டன என்று அவர் குறிப்பிட்டார்.
தொடக்கத்தில் 7 பேர் பிடிபட்ட நிலையில், நால்வர் மட்டுமே கொலையுடன் நேரடியாகத் தொடர்புடையவர்கள். மற்ற மூவர் கேபிள் திருட்டு மற்றும் இதர கொள்ளை வழக்குகளுக்காக விசாரிக்கப்படுகின்றனர்.
இவர்கள் அனைவரும் போதைப்பொருள் மற்றும் வன்முறை தொடர்பான குற்றப் பின்னணி கொண்டவர்கள். 5 பேருக்கு போதைப்பொருள் சோதனையில் 'மெத்தாம்பேட்டமைன்' உறுதி செய்யப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட நால்வர் மீதும் நாளை வியாழக்கிழமை தெலுக் இந்தான் நீதிமன்றத்தில் கொலைக் குற்றச்சாட்டு சுமத்தப்பட உள்ளது. மேலும், இவ்வழக்கில் தொடர்புடைய ஸ்ரீ சைலேஸ்வர ஸ்ரீ வெங்கடேஸ்வர பாபு என்ற நபரை போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர் என்று சுவா கோக் லியான் தெரிவித்தார்.








