புத்ராஜெயா, நவ. 13-
தற்போது வட கிழக்கு பருவமழை தொடங்கியுள்ள வேளையில் நாட்டில் 883 தொடக்க மற்றும் இடைநிலைப்பள்ளிகள், வெள்ள இடர்களுக்கு உரிய பள்ளிகளாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக கல்வி தலைமை இயக்குநர் அஸ்மான் அட்னான் தெரிவித்தார்.
சரவாவில் 227 பள்ளிகளும், சபாவில் 208 பள்ளிகளும், பகாங்கில் 93 பள்ளிகளும், கிளந்தானில் 91 பள்ளிகளும், திரெங்கானுவில் 90 பள்ளிகளும், பேராவில் 45 பள்ளிகளும் வெள்ள அபாயத்தை எதிர்நோக்கக்கூடிய பள்ளிகளாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
அதேவேளையில் சிலாங்கூர் மாநிலத்தில் 42 பள்ளிகளும், கெடாவில் 23 பள்ளிகளும், கோலாலம்பூரில் 19 பள்ளிகளும், ஜோகூரில் 19 பள்ளிகளும், பினாங்கில் 15 பள்ளிகளும், நெகிரி செம்பிலானில் 10 பள்ளிகளும் மலாக்காவில் ஒரு பள்ளியும் வெள்ள இடர்களுக்கு உரிய பள்ளிகளாக வகைப்படுத்தப்பட்டுள்ளதாக அஸ்மான் அட்னான் குறிப்பிட்டார்.
SPM, STPM தேர்வுகள் நெருங்கிக்கொண்டு இருக்கும் வேளையில் தேர்வு எழுதும் மாணவர்கள் வெள்ளத்தினால் எவ்வித பாதிப்பையும் எதிர்கொள்ளாமல் இருக்க முன்னேற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாக அவர் தெரிவித்தார்








