செராஸ், ஜூன் 20-
கடந்த ஏப்ரல் மாதத்தில், பெண் ஒருவரின் டொயோட்டா வியோஸ் ரக காரை எரித்த குற்றத்திற்காக வேலையில்லா நபர் ஒருவருக்கு ஆறு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்க கோலாலம்பூர் செஷன்ஸ் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.
39 வயது தி குணசேகரன் என்ற அந்த நபர் நீதிபதி நோரினா சய்நோள் அபிதின் முன்னிலையில் நிறுத்தப்பட்டு குற்றத்தை ஒப்புக் கொண்டதை தொடர்ந்து அவருக்கு அச்சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
குற்றம் என்று நிரூபிக்கப்பட்டால் கூடிய பட்சம் 14 ஆண்டுகள் சிறை மற்றும் அபராதம் விதிக்க வகை செய்யும் குற்றவியல் சட்டம் 435 ஆவது பிரிவின் கீழ் அவர் குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ளார்.
கடந்த ஏப்ரல் 11 ஆம் தேதி மாலை 3.40 மணியளவில் செராஸ்-சில் உள்ள ஓர் அடுக்குமாடி குடியிருப்பின் முன்புறத்தில் 37 வயது மஞ்சீத்பால் கவுர் என்றவரின் 43,000 வெள்ளி மதிப்பிலான டொயோட்டா வியோஸ் காரை எரித்ததாக அவர் மீது குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.








