கோலா சிலாங்கூர், பிப்ரவரி.16-
கோலாலம்பூர்-கோலா சிலாங்கூர் விரைவுச் சாலையின் டாப்-அப் முகப்பிடங்களில் கள்ள நோட்டுகள் பயன்படுத்தப்பட்ட சம்பவங்கள் நிகழ்ந்துள்ளதை அந்த நிறுவனத்தின் நிர்வாகம் ஒப்புக் கொண்டுள்ளது. எனினும், இத்தகைய சம்பவங்கள் மிகவும் குறைவாகவே உள்ளதாகவும், இது கவலைப்பட வேண்டிய அளவில் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து LATAR விரைவுச்சாலையின் தலைமைச் செயல்பாட்டு அதிகாரி அஹ்மாட் ஃபுவாட் அஹ்மாட் ஷாஹிமி கூறுகையில், இத்தகைய சம்பவங்கள் அரிதாகவே ஏற்படுகின்றன என்றும், விரைவுச்சாலையின் தினசரி செயல்பாடுகளை இவை பெரிய அளவில் பாதிக்கவில்லை என்றும் குறிப்பிட்டார்.
இன்று ஈஜோக்கில் உள்ள டோல் சாவடியில் நடைபெற்ற '2026 சாலை பாதுகாப்பு பிரச்சார' தொடக்க விழாவின் போது அவர் இதனைத் தெரிவித்தார்.
தடுப்பு நடவடிக்கையாக, அனைத்து டாப்-அப் முகப்பிடங்களிலும் கள்ள நோட்டுகளைக் கண்டறியும் கருவிகள் பொருத்தப்பட்டுள்ளதாக அவர் உறுதிப்படுத்தினார்.








