சிம்பாங் அம்பாட், ஜூன்.01-
சிம்பாங் அம்பாட் தாமான் பெலிபிஸிலுள்ள ஒரு வீட்டில் நேற்று 31 வயதுடைய ரோஹின்யா ஆடவர் ஒருவர் குத்திக் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக மூவரைப் போலீசார் கைது செய்துள்ளனர்.
இது குறித்து செபராங் பிறை செலாத்தான் மாவட்ட துணை போலீஸ் தலைவர் முஹமட் நோராஸ்மி அப்துல் ஃகாப்பார் வெளியிட்டுள்ள தகவலில், இச்சம்பவம் குறித்து நேற்று பிற்பகல் 3.20 மணியளவில் போலீசாருக்குத் தகவல் கிடைத்ததாகத் தெரிவித்துள்ளார்.
அதைத் தொடர்ந்து, சம்பவ இடத்துக்கு விரைந்த போலீசார், பல இடங்களில் குத்துக் காயங்களுடன் ரோஹின்யா ஆடவர் ஒருவர் உயிரிழந்த நிலையில் கிடந்ததைக் கண்டறிந்தனர்.
அதே வீட்டில் இருந்த 26 வயதுடைய பெண் ஒருவரும் காயமடைந்த நிலையில் மீட்கப்பட்டு, சிகிச்சைக்காக செபராங் ஜெயா மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டார்.
இந்நிலையில், இந்தக் கொலைச் சம்பவத்துடன் தொடர்புடையதாக நம்பப்படும் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.








