பினாங்கு,டிச.6-
பினாங்கு துணை முதலமைச்சர் என்ற நிலையில் கடந்த 2010 ஆம் ஆண்டு முதல் 2023 ஆண்டு வரையில் பினாங்கு இந்து அறப்பணி வாரியத்தின் தலைவராக தாம் பொறுப்பேற்று இருந்த காலக்கட்டத்தில் தில்லு முல்லு நடந்திருப்பதாக கூறப்படுவதை டாக்டர் பி.. இராமசாமி மறுத்துள்ளார்.
பினாங்கு இந்து அறப்பணி வாரியத்தின் கணக்குகள் அனைத்தும் தலைமை கணக்காய்வாளரைக்கொண்டு சரிபார்க்கப்பட்டதாக டாக்டர் இராமசாமி விளக்கினார்.
அறப்பணி வாரியம் சார்பில் வாங்கப்பட்ட தங்க ரதம் முற்றிலும் தங்கத்திலானது அல்ல, மாறாக, தங்க முலாம் பூசப்பட்டது. தரமில்லாத பொருட்களை கொண்டு அது தயாரிக்கப்பட்டதாக சொல்லப்படுவதும் தவறாகும் என்று டாக்டர் இராமசாமி குறிப்பிட்டார்.
தங்க ரதம் என்றால், முலாம் பூசப்பட்ட தங்கத்துடன் இயற்கையாகவே மற்ற உலோகங்களும் அதில் கலந்திருக்கும். அந்த தங்க ரதத்திற்கு செலவு கிட்டத்தட்ட 8 லட்சம் வெள்ளியாகும். இந்தியாவிலிருந்து இருவரும், உள்நாட்டிலிருந்து ஒருவரும் என மூன்று குத்தகையாளர்கள் சம்பந்தப்படட திறந்த டெண்டர்முறை கையாளப்பட்டது.
அறவாரியத்தின் மதிப்பீட்டிற்குப் பிறகு இந்தியாவைச் சேர்ந்த ஒரு நிறுவனத்திற்கு அந்த குத்தகை வழங்கப்பட்டதாக ஊடகத்திற்கு அளித்துள்ள பேட்டியில் டாக்டர் இராமசாமி விளக்கினார்.








