மலேசியாவின் நவீன மனநல மருத்துவத்தின் தந்தை என்று போற்றப்பட்ட டான்ஸ்ரீ டாக்டர் எம். மகாதேவன், தனது 96-வது வயதில் காலமானார். மலேசிய மனநல மருத்துவ சங்கத்தின் நிறுவனத் தலைவரான இவர், அரசாங்கத்தின் தலைமை மனநல மருத்துவராகவும் பணியாற்றியவர் ஆவார்.
1929-ல் கோலாலம்பூரில் பிறந்த மகாதேவன், இந்தியாவின் பெங்களூரில் மருத்துவப் படிப்பை முடித்தார். பின்னர் டப்ளினில் ஹிப்னாசிஸ் மற்றும் மனநல மருத்துவத் துறையில் முத்திரை பதித்தார்.
பேரா, தஞ்சோங் ரம்புதான் மனநல மருத்துவமனையின் முதல் இயக்குநராகப் பொறுப்பேற்று, அதனை 'ஹொஸ்பிட்டல் பஹாகியா உலு கிந்தா' என மறுபெயரிட்டு மாற்றியமைத்தவர் இவரே. இவரது சேவையைப் பாராட்டி ஹார்வர்ட் பல்கலைக்கழகம் இவரது பெயரில் பயண உதவித்தொகை ஒன்றை நிறுவியுள்ளது.
மறைந்த டாக்டர் மகாதேவனுக்கு அம்பாங், உகாய் ஹைட்ஸ் இல்லத்தில் இன்று மற்றும் நாளை பொதுமக்கள் அஞ்சலி செலுத்தலாம். இறுதிச் சடங்குகள் வரும் வியாழக்கிழமை காலை 9:30 மணிக்கு அவரது இல்லத்தில் நடைபெற்று, மதியம் 12:00 மணிக்கு கோலாலம்பூர், செந்தூல் இந்து மயானத்தில் உடல் தகனம் செய்யப்படும்.








