தொழிலாளர் பாதுகாப்பு திட்டங்களின் விரிவுபடுத்தலுக்குப் பிறகு, நாட்டின் சமூக பாதுகாப்பு கோரிக்கைகள் 200 சதவீதம் வரை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக மனித வள அமைச்சர் டத்தோஸ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
‘லிண்டுங் 24 மணிநேரம்’ திட்டம், ‘கிக் பணியாளர்’ சட்டம் மற்றும் ‘பயணிகள் திட்டம்’ ஆகியவற்றின் அமலாக்கத்தால் இந்த உயர்வு ஏற்படும் என்பதால், மேம்பட்ட மறுவாழ்வு சேவைகளின் தேவையும் அதிகரித்துள்ளது என்று அமைச்சர் ரமணன் குறிப்பிட்டார்.
ஈப்போ, பண்டார் மேரு ராயாவில் உள்ள சுல்தான் நஸ்ரின் ஷா மறுவாழ்வு மையத்தின் திறப்பு விழாவில் அமைச்சர் இதனைத் தெரிவித்தார். பேராக் சுல்தான் நஸ்ரின் முய்ஸுடின் ஷா அவர்களால் அதிகாரப்பூர்வமாகத் திறந்து வைக்கப்பட்ட இந்த மையம், தென்கிழக்கு ஆசியாவிலேயே மிகப்பெரிய மறுவாழ்வு வசதியாகும்.
மேலும், உலகிலேயே அதிக எண்ணிக்கையிலான ஜப்பானின் 'சைபர்டைன் ரோபோட்டிக்' கருவிகளைக் கொண்ட மையமாகவும் இது திகழ்கிறது. நரம்பியல்-ரோபோட்டிக்ஸ் உள்ளிட்ட 151 விரிவான சேவைகளை வழங்கும் இந்த மையம், மருத்துவ மறுவாழ்வோடு நிறுத்தாமல் நோயாளிகள் மீண்டும் வேலைவாய்ப்புப் பெற தொழிற்பயிற்சிகளையும் வழங்கி, அவர்கள் பொருளாதார ரீதியாக மீண்டெழ உதவும் என்று அமைச்சர் ரமணன் ராமகிருஷ்ணன் நம்பிக்கை தெரிவித்தார்.









