பகடிவதை சம்பவங்களைப் பார்த்தவுடன் காணொளியாக பதிவு செய்து சமூக வலைத்தளங்களில் பகிர்வதைவிட, உடனடியாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் தகவல் தெரிவிக்க வேண்டும் என புக்கிட் அமான் குற்றப் புலனாய்வுத் துறை இயக்குநர் டத்தோ குமார் முத்துவேல் வலியுறுத்தியுள்ளார்.
பகடிவதை, விபத்து உள்ளிட்ட சம்பவங்களை மக்கள் உடனடியாக பதிவு செய்து வைரலாக்குவதில் ஆர்வம் காட்டுகின்றனர். ஆனால், அந்தத் தகவல்களை உரிய அமைப்புகளிடம் தெரிவிக்கத் தவறுகின்றனர் என அவர் சுட்டிக்காட்டினார்.
இத்தகைய செயல்கள் விசாரணைக்கு பாதிப்பை ஏற்படுத்துவதுடன், பாதிக்கப்பட்டவர்களுக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும் நீண்டகால மன உளைச்சலை ஏற்படுத்தக்கூடும் என்றும் டத்தோ குமார் தெரிவித்தார்.
பகடிவதை, நகைச்சுவையோ பொழுதுபோக்கோ அல்ல; அது தீவிரமான பிரச்சினை என்றும், பொதுமக்கள் குறிப்பாக இணையவழி பகடிவதை தொடர்பாகவும் தைரியமாக புகார் அளிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.








