மலேசியாவை போதைப்பொருள் கடத்தலுக்கான இடைத்தளமாக பயன்படுத்தி வந்த அனைத்துலக கும்பலை புக்கிட் அமான் போதைப்பொருள் குற்றப் புலனாய்வுத் துறை முறியடித்துள்ளது.
"ஆப்ஸ் லெஜோகாஸ்டர்" நடவடிக்கையின் மூலம் 22 முதல் 51 வயதுக்குட்பட்ட ஒன்பது பேர் கைது செய்யப்பட்டதுடன், மொத்தம் 2 கோடியே 16 லட்சத்து 20 ஆயிரம் ரிங்கிட் மதிப்பிலான போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
கடந்த ஜூலை 12 முதல் ஆகஸ்ட் 3ஆம் தேதி வரை மேற்கொள்ளப்பட்ட தொடர் உளவுத் தகவல் சேகரிப்பு மற்றும் கண்காணிப்பின் அடிப்படையில், பினாங்கு, சிலாங்கூர் மற்றும் நெகிரி செம்பிலான் மாநிலங்களில் மூன்று சோதனைகள் நடத்தப்பட்டதாக புக்கிட் அமான் போதைப்பொருள் குற்றப் புலனாய்வுத் துறை இயக்குநர் டத்தோ ஹுசேன் ஓமார் கான் தெரிவித்தார்.
கைது செய்யப்பட்டவர்களில் ஒரு மலேசியரும் எட்டு வெளிநாட்டினரும் அடங்குவர். மேலும், போதைப்பொருள் கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட நான்கு வெளிநாட்டினர் மீட்கப்பட்டனர்.
ஜூலை 12ஆம் தேதி பினாங்கு, பயான் லெப்பாஸ் பகுதியில் உள்ள ஹோட்டல் ஒன்றின் முன்பாக மேற்கொள்ளப்பட்ட முதல் சோதனையில் இருவர் கைது செய்யப்பட்டதுடன், வாகனத்தில் இருந்து 31.72 கிலோ எடையுள்ள கஞ்சா அடங்கிய 60 பொட்டலங்கள் கைப்பற்றப்பட்டன என்று டத்தோ ஹுசேன் ஒமார் கான் தெரிவித்தார்.








