மலேசியா 2030ஆம் ஆண்டுக்குள் செயற்கை நுண்ணறிவான ஏ.ஐ நாடாக உருவெடுக்க வேண்டும் என இலக்கவியல் அமைச்சர் கோபிந்த் சிங் டியோ தெரிவித்தார்.
ஏ.ஐ தொழில்நுட்பத்தை வெறுமனே பயன்படுத்தும் நாடாக இல்லாமல், மலேசியர்கள் புதிய ஏ.ஐ தீர்வுகளை உருவாக்கும் புதுமையாளர்கள், படைப்பாளர்கள் மற்றும் உருவாக்குநர்களாக மாற வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
ஏ.ஐ துறையில் திறன்களைப் பெறுவதற்கான வாய்ப்புகளை விரிவுபடுத்தும் வகையில், அரசாங்கம் ரக்யாட் டிஜிட்டல் இணையக் கற்றல் தளத்தை விரிவுபடுத்தி வருவதாக அவர் கூறினார்.
இதன் கீழ், இலவச அடிப்படை டிஜிட்டல் மற்றும் ஏ.ஐ கற்றலை வழங்கும் டிஜிட்டல் லிட்டரசி ஹப், உலகளாவிய கல்வி வாய்ப்புகளை வழங்கும் குளோபல் லேர்னிங் பாஸ் மற்றும் அக்டோபர் முதல் செயல்படவுள்ள ஏ.ஐ பில்டர்ஸ் ஹப் ஆகியவை அறிமுகப்படுத்தப்படுகின்றன என்று அம்பாங்கில் இன்று ஏ.ஐ மலேசியா டேக்ஓவர் 2026 எனும் நிகழ்ச்சியில் உரையாற்றுகையில் அமைச்சர் இதனை தெரிவித்தார்.
செப்டம்பர் 16 முதல், மலேசியர்கள் கோர்செரா தளத்தின் மூலம் உலகப் பல்கலைக்கழகங்கள் மற்றும் முன்னணி நிறுவனங்கள் வழங்கும் 16 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாடநெறிகள் மற்றும் சான்றிதழ்களை மூன்று மாதங்களுக்கு இலவசமாகப் பெற முடியும் என்றும் அவர் தெரிவித்தார்.
இதனிடையே, ஆகஸ்ட் 31 முதல் 18 முதல் 30 வயதுக்குட்பட்ட ஒரு லட்சம் மலேசியர்களுக்கு மூன்று மாதங்களுக்கு முன்னணி ஏ.ஐ கருவிகளை இலவசமாகப் பயன்படுத்தும் வாய்ப்பு வழங்கப்படும் என்றும் கோபிந்த் சிங் டியோ அறிவித்தார்.
ஏ.ஐ புரட்சியில் மலேசியா வெறும் பயனாளியாக இல்லாமல், உலகளவில் புதிய தீர்வுகளை உருவாக்கும் நாடாக உருவெடுக்க வேண்டும் என்பதே அரசாங்கத்தின் இலக்கு என்றும் அவர் குறிப்பிட்டார்.








