மானிய விலையில் வழங்கப்படும் திரவ பெட்ரோலிய எரிவாயுவான எல்பிஜியை முறைகேடாக மாற்றி பதுக்கிய குற்றத்திற்காக இரண்டு வங்காளதேசப் பிரஜைகளுக்கு கிள்ளான் செஷன்ஸ் நீதிமன்றம் இன்று தலா 5 மாத சிறைத் தண்டனை விதித்தது.
உள்நாட்டு வாணிபம் மற்றும் வாழ்க்கைச் செலவின அமைச்சின் சிலாங்கூர் மாநில அமலாக்க அதிகாரிகள், போலீசாருடன் இணைந்து கடந்த மே 19ஆம் தேதி காப்பார் பகுதியில் உள்ள பெயரிடப்படாத ஒரு வளாகத்தில் சோதனை நடத்தினர்.
போலீஸ் புகாரைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட சோதனையில், முறையான அனுமதியின்றி 14 கிலோ எடையுள்ள வீட்டு உபயோக எல்பிஜி கலன்களிலிருந்து 50 கிலோ எடையுள்ள வர்த்தக எல்பிஜி கலன்களுக்கு எரிவாயுவை மாற்றும் ‘டிகேன்டிங்’ நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வந்தது கண்டறியப்பட்டது.

சுமார் 40 வயதுடைய இரு வங்காளதேசப் பிரஜைகளும் குற்றத்தை ஒப்புக்கொண்டதைத் தொடர்ந்து, நீதிபதி முஜிப் பின் சரோஜி, அவ்விருவருக்கும் தலா 5 மாத சிறைத் தண்டனை விதித்தார்.
இது தொடர்பாக உள்நாட்டு வாணிபம் மற்றும் வாழ்க்கைச் செலவின அமைச்சின் சிலாங்கூர் மாநில இயக்குநர் முகமட் ஹனிப் பின் டத்தோ’ அசாரி வெளியிட்ட அறிக்கையில், மானியப் பொருட்களை முறைகேடாகப் பயன்படுத்தும் எந்தத் தரப்பினரிடமும் அமைச்சு சமரசம் செய்யாது எனத் தெரிவித்தார்.
அரசாங்கத்தின் மானியங்கள் தகுதியான மக்களைச் சென்றடைவதை உறுதி செய்ய, கட்டுப்படுத்தப்பட்ட மற்றும் மானியப் பொருட்கள் தொடர்பான அமலாக்க நடவடிக்கைகள் தொடர்ந்து தீவிரப்படுத்தப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.








