ஜொகூர் பாரு, ஜூன் 20-
கடந்த ஞாயிற்றுக்கிழமை, மது போதையில் வாகனம் செலுத்தி இளைஞன் ஒருவனுக்கு மரணத்தை விளைவித்ததாக ஓர் இந்திய ஆடவர் ஜொகூர் பாரு மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் இன்று குற்றச்சாட்டப்பட்டார்.
25 வயது எல் சதீஷ் குமார் என்ற அந்த ஆடவர் மாஜிஸ்திரேட் A ஷார்மினி முன்னிலையில் நிறுத்தப்பட்டு குற்றச்சாட்டு வாசிக்கப்பட்ட போது அக்குற்றத்தை அவர் ஒப்புக் கொள்ளவில்லை.
குற்றம் என்று நிரூபிக்கப்பட்டால் சாலைப் போக்குவரத்துச் சட்டம் 1987 -யின் 44(1)(b) மற்றும் 44(1)(6) ஆகிய பிரிவுகளின் கீழ் அவர் குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ளார்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு 12.15 மணியளவில் ஜொகூர் பாரு, இஸ்கந்தர் புத்தேரி, ஜாலான் கெலாங் பாத்தாஹ் - பெண்டாஸ் -யின் 41 ஆவது கிலோமீட்டர் தொலைத்தூரத்தில் அவ்வாடவர் மது அருந்தி, மிட்சுபிஷி எக்ஸ்பாண்டர் ரக காரை ஓட்டிச் சென்று மோட்டார் சைக்கிளில் பயணித்த 17 வயது இளைஞனை மோதி விபத்துக்குள்ளாக்கியதாக அவர் மீது குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.
மேலும், விபத்தில் பாதிக்கப்பட்ட அவ்விளைஞன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த வேளை, இவ்வழக்கின் மறுவிசாரணை வருகின்ற ஜூலை 23 ஆம் தேதி நடைபெறவிருப்பதாக நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.








