பெட்டாலிங் ஜெயா,அக்டோபர் 07-
சிறையிலிடப்பட்டார் முன்னாள் போக்குவரத்து அமைச்சர் ஈஸ்வரன் / சிங்கப்பூரியர்களிடம் பகிரங்க மன்னிப்புக் கோரினார்
சிங்கப்பூர் முன்னாள் போக்குவரத்து அமைச்சர் S. ஈஸ்வரன், உயர் நீதிமன்ற உத்தரவுக்கு ஏற்ப 12 மாத சிறைத்தண்டனையை அனுபவிப்பதற்கு இன்று திங்கட்கிழமை சிறைச்சாலைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
தனக்கு விதிக்கப்பட்ட தண்டனையை எதிர்த்து மேல்முறையீடு செய்யப் போவதில்லை என்று 62 வயது ஈஸ்வரன் அறிவித்துள்ளார்..
ஓர் அமைச்சர் என்ற முறையில் நான் தவறு செய்துள்ளேன். அந்த செயலுக்கு நானே முழு பொறுப்பேற்று சிங்கப்பூரியர்கள் அனைவரிடமும் பகிரங்க மன்னிப்புக்கேட்டுக்கொள்வதாக அவர் தெரிவித்துள்ளார்.
லஞ்ச ஊழல் குற்றத்திற்காக ஓராண்டு சிறைத் தண்டனைக்கு ஆளாகியுள்ள ஈஸ்வரன் தொடர்புடைய வழக்கு, சிங்கப்பூர் அரசியல் வரலாற்றில் பதிவான முக்கிய சம்பவங்களில் ஒன்றாகும்.
சிங்கப்பூர் அரசு பணியாளர்களும், அரசியல்வாதிகளும் தங்கள் நன்னடத்தையிலும், நேர்மையிலும் கடைப்பிடிக்கப்பட்ட வேண்டிய நற்பண்புகளுக்கான உறுதியான நிலைப்பாட்டை உலகிற்கே வலியுறுத்தும் வகையில் ஈஸ்வரன் சம்பந்தப்பட்ட வழக்கின் தீர்ப்பு அமைந்தது
சிங்கப்பூரின் அரசாங்க அமைப்பும், அரசியலும் ஊழலற்றதாக விளங்க வேண்டும் என்று பிரதமர் லாரன்ஸ் வோங், கடந்த அக்டேபார் 3 ஆம் தேதி ஈஸ்வரனுக்கு அளிக்கப்பட்டுள்ள தீர்ப்பு குறித்து கருத்துரைத்துள்ளார்.








