இவ்வாண்டு தேசிய தினக் கொண்டாட்டத்தை முன்னிட்டு புத்ராஜெயா சதுக்கத்தில் 80,000-க்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் கூடுவார்கள் என இலக்கிடப்பட்டுள்ளது.
“மலேசியா மடானி: நல்வாழ்வு அனைவருக்கும்” (Malaysia Madani: Kesejahteraan Dinikmati) என்ற கருப்பொருளில் இவ்வாண்டுக்கான தேசிய தினக் கொண்டாட்டம் அனுசரிக்கப்படுகிறது.
தற்போது இதற்கான ஏற்பாடுகள் 85 முதல் 90 விழுக்காடு வரை நிறைவடைந்துள்ளன. அனைத்துப் பிரிவுகளின் பயிற்சிகள் உட்பட பல்வேறு கட்டப் பணிகள் ஏற்கனவே தொடங்கிவிட்டதாகத் தகவல் தொடர்பு அமைச்சகத்தின் தலைமைச் செயலாளர் டத்தோ அப்துல் ஹலீம் ஹம்சா தெரிவித்தார்.
உலகளாவிய எரிசக்தி நெருக்கடியைக் கருத்தில் கொண்டு, அரசு இம்முறை மிதமான நிதி ஒதுக்கீட்டிலேயே நிகழ்வை ஏற்பாடு செய்துள்ள நிலையில், வான்வழிச் சாகசக் காட்சிகள் மற்றும் அணிவகுப்பு ஊர்திகளின் எண்ணிக்கையும் குறைக்கப்பட்டுள்ளன.
ஆகஸ்ட் 26 முதல் 29 வரை 4 நாட்களுக்கு ஒத்திகைப் பயிற்சிகள் நடைபெறும் என்றும் இதில் 77 குழுக்களைச் சேர்ந்த 10,819 பேர், 328 எந்திரங்கள், 22 மின்சார வாகனங்கள், 112 விலங்குகள், 22 அணிவகுப்புக் இசைக்குழுக்கள் மற்றும் 11 அலங்கார ஊர்திகள் இதில் பங்கேற்கின்றன.








