ஹஜ் யாத்ரீகர்களுக்கான நிதியமான தபோங் ஹாஜி தொடர்பான அரச விசாரணை ஆணையத்தின் (ஆர்.சி.ஐ) அறிக்கை தொடர்பில், அந்த அமைப்பின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி ஒருவரை ஏழு நாட்கள் காவலில் வைக்க மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம், நீதிமன்ற உத்தரவை பெற்றுள்ளது.
60 வயதுடைய அந்த நபர், ஊழல் தடுப்பு ஆணையத்தின் ஆரஞ்சு நிற சீருடை அணிந்து புத்ராஜெயா நீதிமன்றத்திற்கு காலை 9.38 மணிக்கு அழைத்து வரப்பட்டார்.
வழக்கை விசாரித்த நீதிமன்றம், அவரை ஆகஸ்ட் 27ஆம் தேதி வரை காவலில் வைக்க அனுமதி அளித்துள்ளது. இவர் நாட்டின் பல முன்னணி நிறுவனங்களில் முக்கியப் பதவிகளை வகித்த தொழிலதிபர் என தெரியவந்துள்ளது.
முன்னதாக மக்கள் பார்வைக்கு வெளியிடப்பட்ட ஆர்.சி.ஐ அறிக்கை தொடர்பான விசாரணையில் உதவுவதற்காக, தபுங் ஹாஜியின் நான்கு முன்னாள் மூத்த நிர்வாக அதிகாரிகள் உட்பட ஏழு பேரை எம்.ஏ.சி.சி ஏற்கனவே கைது செய்திருந்தது.
2014 முதல் 2020 வரையிலான காலத்தில் தபோங் ஹாஜி அமைப்பின் நிர்வாகம், செயல்பாடுகள் மற்றும் சொத்துக்கள் குறித்து ஆர்.சி.ஐ விசாரணை நடத்தியது.
அந்த அமைப்பின் நிதி நிலைமை குறித்த உண்மையான விவரங்கள் மறைக்கப்பட்டது, சிக்கலான முதலீடுகளால் ஏற்பட்ட இழப்புகள் கணக்கில் காட்டப்படாமை மற்றும் ஆண்டுதோறும் லாபப் பங்கீட்டை நியாயப்படுத்த கிரியேட்டிவ் அக்கவுண்டிங் எனப்படும் கற்பனைத் திறன் சார்ந்த கணக்கியல் முறைகள் கையாளப்பட்டது ஆகியவை எம்.ஏ.சி.சி விசாரணையில் அம்பலமாகின.
மேலும், அரசியல் தலையீடுகள் மற்றும் நிலையற்ற நிலையற்ற மானிய வழங்கல்கள், இந்த நிதிப் பிரச்சனைக்கு முக்கியக் காரணமாக இருப்பது ஊழல் தடுப்பு ஆணையத்தின் விசாரணையில் தெரிய வந்துள்ளது.








