நாட்டின் 69ஆவது தேசிய தினத்தை முன்னிட்டு, இளைஞர்களுக்காக ஓரிரு முக்கியமான புதிய திட்டங்களை அரசாங்கம் அறிவிக்கவுள்ளதாக பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.
வரும் ஆகஸ்ட் 31ஆம் தேதி நடைபெறும் தேசிய தினக் கொண்டாட்டத்தை முன்னிட்டு இந்த அறிவிப்பு வெளியாகும் என அவர் கூறினார்.
இளைஞர்களின் கருத்துகள் மற்றும் தேவைகளை ஆராய்ந்த பின்னரே, அவர்களுக்கு நேரடியாகப் பயனளிக்கும் புதிய முயற்சிகள் அறிவிக்கப்படும் என அன்வார் தெரிவித்தார்.
இதனிடையே, புதிதாக பட்டம் பெற்ற இளைஞர்கள் தொழில் தொடங்குவதற்காக தெக்குன் கடன் பெற, மூன்று ஆண்டுகள் வணிக அனுபவம் இருக்க வேண்டும் என்ற தற்போதைய நிபந்தனையை தளர்த்த அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும் அவர் அறிவித்தார்.
டிஜிட்டல் பொருளாதாரம், சிறு வணிகம் மற்றும் கிக் பொருளாதாரத்தில் அதிகரித்து வரும் இளைஞர்களின் பங்களிப்புக்கு ஏற்ப அரசாங்கக் கொள்கைகளும் மாற்றியமைக்கப்படும் என பிரதமர் கூறினார்.








