நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதாகக் கூறப்படும் ‘கார்ப்பரேட் மாஃபியா’ விவகாரத்தின் விசாரணை எந்த நிலையில் உள்ளது என்பதை மக்களுக்குத் தெரிவிக்க வேண்டும் என ஜசெக தலைவர் கோபிந்த் சிங் டியோ வலியுறுத்தியுள்ளார்.
போலீஸ் படைத் தலைவர் காலிட் இஸ்மாயில் மற்றும் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான எஸ்.பி.ஆர்.எம் தலைமை ஆணையர் அப்துல் ஹலிம் அமான் ஆகியோர் விசாரணையின் தற்போதைய நிலை குறித்து விளக்கம் அளிக்க வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.
இவ்விவகாரம் தொடர்பாக கடந்த மார்ச் மாதமே அமைச்சரவை முழுமையான விசாரணைக்கு உத்தரவிட்டதாகவும், அதன்பின்னர் விசாரணை நடத்த போதுமான கால அவகாசம் கிடைத்துள்ளதாகவும் இலக்கவியல் அமைச்சருமான கோபிந்த் சிங் கூறினார்.
விசாரணைக்கு உதவக்கூடிய முக்கிய நபர்களான தொழிலதிபர் விக்டர் சின் உள்ளிட்டோர் விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளனரா? என்பதையும் தெரிவிக்க வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.
சந்தை நம்பிக்கையை பாதிக்கக்கூடிய தேசிய முக்கியத்துவம் வாய்ந்த விவகாரம் என்பதால், இதில் விரைவான மற்றும் உறுதியான நடவடிக்கை அவசியம் என்றும் கோபிந்த் சிங் தெரிவித்துள்ளார்.








