2.1 பில்லியன் ரிங்கிட் செலவில் மேற்கொள்ளப்படும் கோலாலம்பூர்–காராக் விரைவுச்சாலை விரிவாக்கத் திட்டமும், மூன்றாவது கெந்திங் செம்பா சுரங்கப்பாதை அமைக்கும் பணியும் 2030ஆம் ஆண்டுக்குள் முழுமையாக நிறைவடையும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு மார்ச் மாதம் தொடங்கிய இந்தப் பணிகள், 45.3 கிலோமீட்டர் தூரத்திற்கு சிலாங்கூர் மற்றும் பகாங் மாநிலங்களை உள்ளடக்கி மேற்கொள்ளப்படுகின்றன என்று பொதுப்பணித்துறை அமைச்சர் டத்தோ ஸ்ரீ அலெக்சாண்டர் நந்தா லிங்கி தெரிவித்தார்.
விரைவுச்சாலையின் இருவழிப் பாதைகள் மூன்று மற்றும் நான்கு பாதைகளாக விரிவுபடுத்தப்படவுள்ளன. இந்த திட்டத்தின் முக்கிய அம்சமாக, கெந்திங் செம்பாவில் 999 மீட்டர் நீளத்தில் மூன்றாவது சுரங்கப்பாதை அமைக்கப்படுகிறது.
பணிகள் அனைத்தும் வரும் 2030ஆம் ஆண்டு மார்ச் 8-க்குள் நிறைவடைய திட்டமிடப்பட்டுள்ள போதிலும், 2029ஆம் ஆண்டிலேயே முடிக்க முடியும் என மேம்பாட்டாளர் உறுதியளித்துள்ளதாக டத்தோ ஸ்ரீ அலெக்சாண்டர் நந்தா லிங்கி தெரிவித்துள்ளார்.








