கிள்ளான், ஜாலான் தெங்கு கிளானா லிட்டில் இந்தியா பகுதியில் இன்று காலை நிகழ்ந்த தங்க நகைக்கடை கொள்ளை முயற்சியில் தொடர்புடைய நான்கு பேரை போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
தென் கிள்ளான் மாவட்ட துணை போலீஸ் தலைவர், சூப்பிரிண்டெண்ட் கமலரிஃபின் அமன் ஷா கூறுகையில், காலை சுமார் 10.30 மணியளவில் இந்தச் சம்பவம் நடந்ததாக தெரிவித்தார்.
தலைக்கவசம் அணிந்த மூன்று பேர் கடைக்குள் புகுந்து, சுத்தியலால் கண்ணாடி காட்சிப்பெட்டிகளை உடைக்க முயன்றனர். அவர்களில் ஒருவர் துப்பாக்கி போன்ற பொருளை வைத்திருந்ததாக கூறப்படுகிறது.
ஆனால், கடையின் பாதுகாப்பு எச்சரிக்கை மணி ஒலித்ததால், கண்ணாடியை உடைக்க முடியாமல் அவர்கள் தப்பிச் சென்றனர்.கடைக்கு வெளியே மோட்டார் சைக்கிளுடன் காத்திருந்த மற்றொரு நபருடன் சேர்ந்து, நான்கு பேரும் அங்கிருந்து தப்பியோடினர்.
கும்பலாக கொள்ளையடிக்க முயன்றபோது காயத்தை ஏற்படுத்தியதாகவும், கொள்ளை முயற்சியின்போது துப்பாக்கியை காட்டியதாகவும் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
இந்த கொள்ளை முயற்சியில் தொடர்புடையவர்களை அடையாளம் கண்டு கைது செய்யும் நடவடிக்கைகள் தற்போது தீவிரப்படுத்தப்பட்டுள்ளன என்று சூப்பிரிண்டெண்ட் கமலரிஃபின் அமன் ஷா தெரிவித்தார்.








