Aug 21, 2026
Thisaigal NewsYouTube
காதல் மோசடி கும்பல் ; 21 பேர் கைது
தற்போதைய செய்திகள்

காதல் மோசடி கும்பல் ; 21 பேர் கைது

Share:

கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையம் (கே.எல்.ஐ.எ) மற்றும் நெகிரி செம்பிலான், நீலாய் ஆகிய இடங்களில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது, ​​இணைய காதல் மோசடிக் கும்பல் ஒன்றின் மூளையாகச் செயல்பட்டதாகக் கருதப்படும் நால்வர் உட்பட மொத்தம் 21 பேர் கைது செய்யப்பட்டனர்.

ஒரு மாத கால உளவுத் தகவல் சேகரிப்பு மற்றும் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில், மாலை 5:55 மணிக்கு இந்தச் சிறப்பு நடவடிக்கை தொடங்கப்பட்டதாகக் குடிநுழைவுத் துறை தலைமை இயக்குநர் டத்தோ ஜகரியா ஷாபான் தெரிவித்தார்.

அக்கும்பலைச் சேர்ந்தவர் என்று சந்தேகிக்கப்படும் உள்ளூர் நபர் ஒருவரையும், 50 முதல் 53 வயதுக்கு இடைப்பட்ட சீன நாட்டைச் சேர்ந்த ஆண் மற்றும் பெண் ஒருவரையும் கே.எல்.ஐ.எ முனையத்தில் தடுத்து நிறுத்தப்பட்டு, இதர நபர்களை பிடிக்கும் முயற்சி துரிதப்படுத்தப்பட்டது.

நீலாயில் நடத்தப்பட்ட சோதனையில், சீனா, மியன்மார், இரஷ்யா, பாகிஸ்தான் நாடுகளைச் சேர்ந்த 18 வயது முதல் 23 வயதுக்கு உட்பட்ட 18 பேர் கைது செய்யப்பட்டனர்.

இணைய காதல் மோசடி, போலி பொருட்களை விற்பது போன்ற சட்டவிரோத நடவடிக்கையின் மூலம் அக்கும்பல் 2 லட்சத்து 2,280 ரிங்கிட் வரை இலாபத்தை ஈட்டியதாக நம்பப்படுகிறது.

கைது செய்யப்பட்ட அனைவரும் மேலதிக நடவடிக்கைக்காக புத்ராஜெயா குடிநுழைவு அலுவலகத்திற்கு கொண்டு செல்லப்பட்டனர்.

Related News