சபா, கோத்தா கினாபாலு, காம்போங் தாராவ், மெங்காத்தால் அருகே அதிகாலை வீடொன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் முதியவர் உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் தீயில் கருகி மாண்டனர்.
உயிரிழந்தவர்கள் 67 வயது லாவ்ப்பின் அடோவ், அவரது 50 வயது மகன் அஸ்மான் மடுயின் மற்றும் 29 வயது பேத்தி நூருல் அஷிக்கின் அலினோர் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். நூருலின் 34 வயதுடைய கணவர் தீக்காயங்களுக்குள்ளான நிலையில், மேல் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்தச் சம்பவம் குறித்து அதிகாலை 1:43 மணிக்குத் அவசர அழைப்பு கிடைத்ததாக Lintas தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்தின் தலைவர், மூத்த உதவித் தீயணைப்பு கண்காணிப்பாளர் நூர் ஷெர்ரியானா பொஹாரி தெரிவித்தார்.
13 பேர் கொண்ட தீயணைப்பு குழுவினர், அந்த இரண்டு மாடி வீட்டில் ஏற்பட்ட தீயை அதிகாலை 2.10 மணியளவில் கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
அதன்பின்னர் வீட்டில் நடத்தப்பட்ட தேடுதலில், தீயில் கருகி உயிரிழந்த நிலையில் கிடந்த அம்மூவரும் மீட்கப்பட்டு மேல் நடவடிக்கைக்காகக் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டது.








