நாட்டில் மக்கள் மத்தியில் அரசியல் மீதான சோர்வு அதிகரித்து வருவதாக மூத்த பத்திரிகையாளர் ஏ. காதீர் ஜாசின் எச்சரித்துள்ளார்.
2013 பொதுத் தேர்தலில் 84 விழுக்காடாக இருந்த வாக்காளர் வருகை, 2018-இல் 82.32 விழுக்காடாகவும், 2022-இல் 74.5 விழுக்காடாகவும் குறைந்ததை அவர் சுட்டிக்காட்டினார்.
அண்மையில் நடைபெற்ற ஜசெகவின் சிறப்பு மாநாட்டில், 4,264 பிரதிநிதிகளில் வெறும் 51.2 விழுக்காட்டினர் மட்டுமே பங்கேற்றதும் அரசியல் சோர்வின் அறிகுறி என்றார்.
கட்சிகளுக்குள் நீடிக்கும் உட்கட்சி மோதல்கள், தலைவர்களின் அரசியல் நாடகங்கள் மற்றும் உறுப்பினர்களின் உணர்வுகளுடன் விளையாடும் போக்கு ஆகியவை மக்களை அரசியலிலிருந்து விலக்கி வருவதாக அவர் கூறினார்.
இந்த அரசியல் சோர்வு தொடர்ந்தால், எதிர்காலத்தில் களவாணி ஆட்சி அல்லது திறமையற்றவர்களின் ஆட்சி நாட்டை ஆளும் அபாயம் ஏற்படலாம் என்றும் காதீர் ஜாசின் கடுமையாக எச்சரித்துள்ளார்.








