கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையமான கே.எல்.ஐ.ஏ வழியாக செயல்பட்டதாக நம்பப்படும் போதைப்பொருள் கடத்தல் கும்பலை போலீசார் முறியடித்து, 600 கிலோவுக்கும் அதிகமான போதைப்பொருளை பறிமுதல் செய்துள்ளனர்.
சுமார் 3 கோடியே 75 லட்சம் ரிங்கிட் மதிப்பிலான சியாபு, ஹெரோயின், கோக்கைன் மற்றும் கஞ்சா மலர்கள் கைப்பற்றப்பட்டன என்று சிலாங்கூர் மாநில போலீஸ் தலைவர் டத்தோ ஷாசெலி கஹார் தெரிவித்தார்.
கடந்த ஆகஸ்ட் 4 முதல் திங்கள்கிழமை வரை நடத்தப்பட்ட தொடர் சோதனைகளில், வெளிநாட்டினரை உள்ளடக்கிய 12 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர்.
அதிக சம்பள வேலை வாய்ப்பு வழங்குவதாக வாட்ஸ்அப் மற்றும் டெலிகிராம் மூலம் ஆசைகாட்டி, சிலரை போதைப்பொருள் கடத்தலுக்குப் பயன்படுத்தியதாக நம்பப்படுகிறது.
இந்தக் கும்பல் தொடர்பாக மூவர் ஏற்கனவே நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளதாக டத்தோ ஷாசெலி கஹார் தெரிவித்தார்.








