புத்ராஜெயா, மே.04-
மலேசிய ஊழல் தடுப்பு ஆணைய தலைமையகத்திற்குச் செல்லும் வழியில் காணாமல் போனதாகக் கூறப்படும் 39 வயது பமேலா லிங் யுஏ என்ற பெண் தொடர்பான விசாரணையை ஆணையம் காவல் துறையிடம் ஒப்படைத்துள்ளது. அவர் எஸ்பிஆர்எம் சட்டம் 2009 இன் கீழும், பணமோசடி தடுப்புச் சட்டம் 2001 இன் கீழும் விசாரணைக்கு உதவ ஏப்ரல் 9 அன்று எஸ்பிஆர்எம் தலைமையகத்திற்கு வருமாறு கேட்டுக் கொள்ளப்பட்டார்.
இருப்பினும், அவர் அன்று எஸ்பிஆர்எம் தலைமையகத்திற்கு வரவில்லை, மேலும் எஸ்பிஆர்எம் அதிகாரிகளால் அவரது தொலைபேசியும் தொடர்பு கொள்ள முடியவில்லை என ஆணையம் கூறியுள்ளது. அப்பெண்ணின் வழக்கறிஞர் அன்று மாலை அவர் காணாமல் போனதாக காவல் துறையில் புகார் அளித்தார். எனவே, எஸ்பிஆர்எம் இந்தப் பெண்ணைக் கண்டுபிடிக்கும் முயற்சியைக் காவல் துறையிடம் ஒப்படைத்துள்ளது.








