சிவபெருமானின் முதன்மை ஆயுதமான திரிசூலத்தை எட்டி உதைத்து அவமதித்து, இந்துக்களின் மனதை நோகடித்தது தொடர்பில் தேடப்பட்டு வந்த நபரான தமீம் தஹ்ரி அப்துல் ரசாக், நான்கு மாதங்களுக்குப் பிறகு இன்று போலீசில் சரணடைந்தார்.
தமீம் தஹ்ரி , இன்று மதியம் 12.45 மணியளவில் சிரம்பான் போலீஸ் தலைமையகத்தில் சரணடைந்ததாகவும், தடுப்புக் காவல் விசாரணைக்காக அவர் நாளை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார் என்றும் நெகிரி செம்பிலான் போலீஸ் தலைவர் அல்சப்னி அகமது தெரிவித்துள்ளார்.
கடந்த மார்ச் மாதம் நீதிமன்றத்தில் குற்றச்சாட்டை எதிர்கொள்ளவிருந்த நிலையில் தப்பியோடிய தமீம், தாய்லாந்தில் தங்கியிருந்ததோடு, அண்மையில் கிளாந்தான் எல்லை வழியாகச் சட்டவிரோதமாக மலேசியா திரும்பியுள்ளார். திரிசூலத்தை அவமதித்த விவகாரத்தில் அவருக்கு எதிராக நாடு முழுவதும் மொத்தம் 192 போலீஸ் புகார்கள் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.








