மலேசியாவில் எல் நினோ காலநிலை நிகழ்வு ஆண்டின் இறுதிக்குள் மேலும் வலுவடையக்கூடும் என்பதால், அது நாட்டின் விவசாயம், சுகாதாரம் மற்றும் சுற்றுச்சூழல் துறைகளில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
மலாயாப் பல்கலைக்கழக வானிலை ஆய்வாளர் பேராசிரியர் டத்தோ டாக்டர் அஜிசான் அபு சாமா கூறுகையில், இதனால் சராசரி மழையளவு 10 முதல் 20 விழுக்காடு வரை குறையும் என்பதால் நாட்டின் வட மாநிலங்களில் கடுமையான வறட்சியும் வெப்ப அலையும் ஏற்படலாம் என்றார்.
அதேவேளையில், காடுகளில் பழ உற்பத்தி பெருக இது உதவினாலும், மறுபுறம் ஏடிஸ் கொசுக்கள் வேகமாக இனப்பெருக்கம் செய்து டிங்கி காய்ச்சல் அபாயத்தை அதிகரிக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
பொதுச் சுகாதார மருத்துவ நிபுணர் டத்தோ டாக்டர் ஜைனல் அரிஃபின் உமர் கூறுகையில், இந்த வெப்ப நிலை உயர்வால் மக்களுக்கு நீர்ச்சத்து குறைபாடு, மாரடைப்பு மற்றும் பக்கவாதம் ஏற்படும் அபாயம் உள்ளதாக எச்சரித்தார். குறிப்பாக குழந்தைகள், முதியவர்கள், கர்ப்பிணிகள் மற்றும் வெயிலில் வேலை செய்யும் தொழிலாளர்கள் இதனால் அதிகம் பாதிக்கப்படலாம் என்பதால் முன்னெச்சரிக்கையுடன் இருக்குமாறு அவர் அறிவுறுத்தினார்.








