ராயல் மலேசிய விமானப்படை பயன்படுத்தத் தொடங்கியுள்ள அன்கா-எஸ் ஆளில்லா விமான அமைப்பானது, நாட்டின் பாதுகாப்பு மற்றும் கடல்சார் கண்காணிப்பு திறன்களை வலுப்படுத்துவதில் முக்கிய அங்கம் வகிக்கவுள்ளதாக தற்காப்பு அமைச்சர் டத்தோ ஸ்ரீ முகமது காலித் நோர்டின் தெரிவித்துள்ளார்.
இந்த புதிய அன்கா-எஸ் ஆளில்லா விமான அமைப்பான யுஏஎஸ், இதற்கு முன்பு கிடைக்காத அளவில், விரிவான செயல்பாட்டு கண்காணிப்பு வசதியை வழங்கும் திறன் கொண்டது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
குறிப்பாக, தென்சீனக் கடல் உள்ளிட்ட முக்கியமான கடல்சார் பகுதிகளில் தொடர்ந்து கண்காணிப்பு மேற்கொள்ள இந்த அமைப்பு உதவும் என்று நேற்று லபுவான் விமானப்படைத் தளத்தில் நடைபெற்ற அன்கா-எஸ் ஆளில்லா விமானப் பிரிவு அறிமுக விழாவில் காலித் நோர்டின் தெரிவித்துள்ளார்.
மேலும், தேசிய பாதுகாப்பையும் நாட்டின் இறையாண்மையையும் பாதுகாக்கும் நடவடிக்கைகளில் இனி, மலேசியாவுக்கு மிக முக்கியமான தகவல் சார்ந்த முன்னிலை கிடைக்கும் என்றும் அவர் உறுதியளித்துள்ளார்.
இந்த தொழில்நுட்பத்தின் மூலம் கடல்சார் எல்லைகள், சந்தேகத்திற்கிடமான நகர்வுகள் மற்றும் பாதுகாப்பு அச்சுறுத்தல்களை விரைவாகக் கண்டறிந்து, அதற்கேற்ற நடவடிக்கைகளை எடுக்க பாதுகாப்புப் படைகளுக்கு அதிக திறன் கிடைக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், 423.8 மில்லியன் ரிங்கிட் செலவில் மூன்று அன்கா-எஸ் ஆளில்லா விமானங்களை மலேசியா கொள்முதல் செய்துள்ள நிலையில், இந்த கொள்முதல் திட்டத்தில் தரைக் கட்டுப்பாட்டு நிலையங்கள் மற்றும் பணியாளர்களுக்கான இரண்டு ஆண்டுகால பயிற்சியும் வழங்கவுள்ளது.
மேலும், அன்கா-எஸ் விமானம் 24 மணி நேரத்திற்கும் மேலாக தொடர்ந்து பறக்கும் திறன் கொண்டதுடன், அதிகபட்சமாக 30,000 அடி உயரத்தில் செயல்படக்கூடியது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த புதிய தொழில்நுட்பம் மூலம் கடல்சார் எல்லை பாதுகாப்பு, உளவுத்தகவல் சேகரிப்பு மற்றும் தேசிய இறையாண்மையைப் பாதுகாக்கும் நடவடிக்கைகளில் மலேசியாவின் திறன் குறிப்பிடத்தக்க அளவில் மேம்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.








