கெடா, குருன் பகுதியில் உள்ள ஹோபார்ட் இராணுவ முகாமின் பயிற்சி மைதானத்தில் நேற்று காலை நிகழ்ந்த குண்டுவெடிப்புச் சம்பவம் தொடர்பாக 7 பேரிடம் போலீசார் வாக்குமூலம் பதிவு செய்துள்ளனர்.
இந்த வெடிப்பு சம்பவத்தில் இரண்டு ராணுவ வீரர்கள் உயிரிழந்த நிலையில், சம்பவம் குறித்து தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
இன்று மேலும் பல சாட்சிகளிடம் விசாரணை நடத்தப்படும் என்று கெடா மாநில துணை போலீஸ் தலைவர் பத்ருல்ஹிஷாம் பஹாருதீன் தெரிவித்துள்ளார்.
கைக்குண்டு எறிதல் பயிற்சியில் ஈடுபட்டவர்கள், சம்பவ இடத்தில் இருந்தவர்கள் மற்றும் பயிற்சியை மேற்பார்வையிட்ட அதிகாரிகள் உள்ளிட்ட அனைவரிடமும் விசாரணை நடத்தப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் இச்சம்பவம் நிகழ்ந்ததற்கு பாதுகாப்பு நடைமுறைகளில் ஏதேனும் குறைபாடுகள் இருந்தனவா? என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் அதிகாரிகள் விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.








