பள்ளிகளில் பகடிவதை சம்பவங்களில் ஈடுபடும் சிறார்கள் குற்றம் செய்தது நிரூபிக்கப்பட்டால், அவர்களின் பெற்றோரும் சட்டரீதியான நடவடிக்கைகளை எதிர்கொள்ள வேண்டிய நிலை ஏற்படலாம் என்று சட்ட சீர்திருத்தங்களுக்கான பிரதமர் துறை அமைச்சர் டத்தோ ஸ்ரீ அசலினா ஒத்மான் தெரிவித்துள்ளார்.
2026-ஆம் ஆண்டு பகடிவதைத் தடுப்புச் சட்டம் (பிரிவு 876) – ஆனது, குடும்பங்களும் தங்களது பிள்ளைகளின் ஒழுக்கக்கேடான நடத்தைக்கு பொறுப்பேற்க வேண்டும் என்ற நோக்கத்துடன் உருவாக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
வழக்கமான குற்றவியல் சட்டங்களில் குற்றத்தைச் செய்த நபரே முழுப் பொறுப்பையும் ஏற்க வேண்டிய நிலையில், இந்த புதிய சட்டத்தில் குடும்பத்தினரின் பொறுப்பு என்ற அம்சமும் சேர்க்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அதன் படி, பகடி வதை செயல்களில் ஈடுபட்டதாக நிரூபிக்கப்பட்ட சிறார்களின் குடும்பத்தினருக்கும், அபராதம் உள்ளிட்ட பிற தண்டனைகள் விதிக்கப்பட வாய்ப்புள்ளதாக அசலினா எச்சரித்துள்ளார்.
இச்சட்டத்தின் நோக்கமானது, சிறார்களின் ஒழுக்கம் மற்றும் நடத்தை குறித்து குடும்பங்களும் அதிக பொறுப்புணர்வுடன் செயல்படுவதை உறுதி செய்வதாகும் என நேற்று நடைபெற்ற பள்ளிகளில் பகடிவதை சம்பவங்களுக்கான நடுவர் மன்றம் அறிமுக நிகழ்ச்சிக்குப் பிறகு நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் அசலினா தெரிவித்துள்ளார்.








