கோலாலம்பூர், பிப்ரவரி.24-
பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் இன்று விஸ்மா பெர்விராவில் தற்காப்பு அமைச்சின் உயர்மட்ட நிர்வாகத்தினருடன் ஒரு முக்கியச் சந்திப்பை நடத்தினார். சுமார் ஒரு மணி நேரம் நீடித்த இந்தச் சந்திப்பில், தற்காப்பு அமைச்சர் டத்தோ ஶ்ரீ முகமட் காலிட் நோர்டின், தலைமைச் செயலாளர் டான் ஶ்ரீ ஷம்சுல் அஸ்ரி அபு பக்கர் மற்றும் மலேசிய ஆயுதப்படைத் தளபதி ஜெனரல் டத்தோ மாலெக் ரசாக் சுலைமான் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்தச் சந்திப்பின் போது, நாட்டின் பாதுகாப்பு மற்றும் தற்காப்புத் தயார்நிலை குறித்த முக்கிய அம்சங்கள் ஆலோசிக்கப்பட்டதாகத் தெரிகிறது. குறிப்பாக, மலேசிய ஆயுதப்படை வீரர்களின் நலன்கள், நிர்வாக மேலாண்மை மற்றும் தற்காப்புத் துறையில் மேற்கொள்ளப்பட வேண்டிய நவீனமயமாக்கல் திட்டங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது.
மேலும், தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக விளங்கும் தற்கால சவால்களை எதிர்கொள்வதற்கான வியூகத் திட்டங்களை வலுப்படுத்துவது குறித்தும் பிரதமர் அன்வார் மற்றும் தற்காப்பு அமைச்சின் அதிகாரிகள் கருத்துகளைப் பரிமாறிக் கொண்டனர்.








