ஷா ஆலாம், பிப்ரவரி.09-
வழிபாட்டுத் தலங்கள் தொடர்பான சிக்கல்களைக் கையாள்வதில் அரசாங்கம் மிகவும் விவேகமான அணுகுமுறையைக் கடைப்பிடிக்கும் என்றும், தற்போதுள்ள விதிமுறைகளைப் பின்பற்றுவதற்கு சம்பந்தப்பட்ட நிர்வாகத் தரப்பினருக்குப் போதுமான கால அவகாசம் வழங்கப்படும் என்றும் தேசிய ஒருமைப்பாட்டுத் துறை துணை அமைச்சர் ஆர். யுனேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், அவசரப்பட்டு எடுக்கப்படும் எந்தவொரு நடவடிக்கையும் நாட்டில் நிலவும் சமூக நல்லிணக்கத்தைப் பாதிப்பதோடு, தேவையற்ற பதற்றத்தையும் உருவாக்கக்கூடும் என்பதால் அத்தகைய முடிவுகள் தவிர்க்கப்பட வேண்டும் என்று கூறியுள்ளார்.
நமது சமூகத்தில் பல்வேறு அரசியல் மாற்றங்களும் மாறுபட்ட கருத்துகளும் இருந்தாலும், நாடு சரியான பாதையில் பயணிக்க வேண்டும் என்பதையும், பரஸ்பர புரிதல், மரியாதை மற்றும் வலுவான ஒற்றுமையே அதன் அடித்தளம் என்பதையும் பெரும்பான்மையான மலேசியர்கள் ஏற்றுக் கொண்டுள்ளனர் என்று யுனேஸ்வரன் குறிப்பிட்டார்.
அரசாங்கத்தின் அடிப்படைக் கொள்கை மிகவும் தெளிவானது என்று கூறிய யுனேஸ்வரன், மதம் எதுவாக இருந்தாலும் அனைத்து வழிபாட்டுத் தலங்களும் குறிப்பாக நில உரிமை மற்றும் அனுமதி தொடர்பான சட்டங்கள் மற்றும் வழிகாட்டுதல்களுக்கு உட்பட்டவை என்பதை உறுதிப்படுத்தினார்.








