மாநிலத் தேர்தல் பிரச்சார சூழலை சாதகமாகப் பயன்படுத்தி, கோலாலம்பூர் மாநகர் மன்றமான டிகிகேஎல்-இன் பணியாளர் அமைப்பு குறித்து சமூக ஊடகங்களில் பரவி வரும் பொய்யான தகவல்களை பொதுமக்கள் நம்ப வேண்டாம் என்று கூட்டரசுப் பிரதேச அமைச்சர் ஹன்னா இயோ வலியுறுத்தியுள்ளார்.
வாட்ஸ்அப் வழியாக பரவி வரும் தகவல் ஒன்றில், டிகிகேஎல் வெறும் 7 இந்தியர்களும், 1 சீனர் மட்டுமே பணியாற்றுவதாகக் கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில், இந்த தகவல் முற்றிலும் தவறானது என்றும், டிகிகேஎல்-இன் உண்மையான பணியாளர் விவரங்களை அது பிரதிபலிக்கவில்லை என்றும் ஹன்னா இயோ குறிப்பிட்டுள்ளார்.
கடந்த ஜூலை 1-ஆம் தேதி நிலவரப்படி, டிகிகேஎல் மொத்தம் 9 ஆயிரத்து 131 பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.
இதில் 490 இந்தியர்களும், 22 சீனர்களும் இடம்பெற்றுள்ளனர் என்று ஹன்னா இயோ விளக்கமளித்துள்ளார்.
அதேவேளையில், மேலாண்மை மற்றும் தொழில்முறை பிரிவில் தற்போது 10 இந்திய அதிகாரிகளும், 2 சீன அதிகாரிகளும் பணியாற்றி வருகின்றனர் என்பதையும் அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.
இந்நிலையில், டிகிகேஎல்-இல் அனைத்து இனங்களின் பிரதிநிதித்துவத்தையும் மேலும் மேம்படுத்த வேண்டிய அவசியம் இருப்பதை தாம் ஏற்றுக்கொள்வதாகவும் ஹன்னா இயோ உறுதியளித்துள்ளார்.








