சிப்பாங், ஜூலை.12-
சிப்பாங், பண்டார் பாரு சாலாக் திங்கியில் உள்ள கோவில் ஒன்றில், முன்னாள் அழகு ராணிப் போட்டி வெற்றியாளரான பெண் ஒருவரை மானபங்கம் செய்ததாக போலீசாரால் தேடப்பட்டு வரும் பூசாரி ஒருவர், நாட்டை விட்டு தப்பி விடாமல் இருப்பதற்கு நாட்டின் எல்லைப் பகுதிகளில் உள்ள அனைத்து நுழைவாயில்கள் மற்றும் வெளியேறும் பகுதிகள் விழிப்பு நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
நாட்டின் அனைத்து வெளியேறும் வழிகளையும் நாங்கள் தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். அந்த சந்தேக நபர் இன்னமும் நாட்டில் இருப்பதாக நம்பப்படுகிறது என்று சிப்பாங் போலீசார் தெரிவித்துள்ளனர்.
சிறப்பு பூஜை என்ற பெயரில் கடந்த ஜுலை 4 ஆம் தேதி நிகழ்ந்த இந்த மானபங்கம் சம்பவம் தொடர்பில் 27 வயது அந்தப் பெண் செய்து கொண்ட போலீஸ் புகாரைத் தொடர்ந்து ஓர் இந்தியப் பிரஜையான 36 வயது பூசாரி தொடர்ந்து தேடப்பட்டு வருகிறார்.
சம்பவம் நிகழ்ந்த அன்றே அந்த பூசாரி, கோவிலிருந்து தலைமறைவாகி விட்டார். இச்சம்பவம் தொடர்பில் கோயில் நிர்வாகத்திடம் இருந்து வாக்குமூலங்கள் பெற மொத்தம் ஒன்பது பேர் அழைக்கப்பட்டுள்ளனர் என்று சிப்பாங் மாவட்ட போலீசார் தெரிவித்தனர்.
முன்னதாக பாதிக்கப்பட்ட பெண், சிப்பாங்கில் உள்ள கோவிலில் பூசாரி ஒருவரினால் தனக்கு நேர்ந்த கசப்பான சம்பவம் குறித்து சமூக ஊடகப் பதிவில் பேசி, வெளியிட்ட காணொளி வைரலானது.








