ஷா ஆலாம், பிப்ரவரி.11-
மலேசியாவில் 'சட்டவிரோத ஆலயங்கள்' என வகைப்படுத்தப்படும் வழிபாட்டுத் தலங்கள் குறித்த சர்ச்சைகளை உணர்ச்சிவசப்படாமல், வரலாற்று ரீதியாகவும் முறையான நிர்வாக அணுகுமுறையுடனும் கையாள வேண்டும் என கோத்தா கெமுனிங் சட்டமன்ற உறுப்பினர் பிரகாஷ் சம்புநாதன் கேட்டுக் கொண்டுள்ளார்.
சட்டத்தின் இறையாண்மையை மதிப்பதாகக் குறிப்பிட்ட அவர், அதே வேளையில் அத்துமீறி நிலத்தை ஆக்கிரமிக்கும் நோக்கத்திற்கும், காலனித்துவ காலத்திலிருந்து பல தசாப்தங்களாக இருக்கும் பாரம்பரிய ஆலயங்களுக்கும் இடையே உள்ள வித்தியாசத்தை அரசு உணர வேண்டும் என வலியுறுத்தினார். பல ஆலயங்கள் நவீன நிலச்சட்டங்கள் உருவாவதற்கு முன்பே தற்காலிக அனுமதியுடன் கட்டப்பட்டவை என்பதால், அவற்றை வெறும் சட்டவிரோதக் கட்டிடங்களாகப் பார்ப்பது நீதியாகாது என்றார்.
இந்த விவகாரத்தை நிர்வாக ரீதியிலான சவாலாகக் கருத வேண்டுமே தவிர, ஒரு சமூகத்தின் தோல்வியாகப் பார்க்கக்கூடாது என்று குறிப்பிட்ட பிரகாஷ், சிங்கப்பூர், இந்தியா மற்றும் இங்கிலாந்து போன்ற நாடுகள் இத்தகைய பாரம்பரியக் கட்டிடங்களை அங்கீகரித்து முறைப்படுத்துவதை உதாரணமாகச் சுட்டிக் காட்டினார்.
எனவே, கூட்டரசு அரசாங்கமும் ஊராட்சி மன்றங்களும் இணைந்து இத்தகைய பாரம்பரிய வழிபாட்டுத் தலங்களை முறைப்படுத்துவதற்கான ஒரு வெளிப்படையான திட்டத்தை உருவாக்க வேண்டும். இதற்காக ஒரு தேசியப் பதிவேட்டை உருவாக்கி, பாதுகாப்பு மற்றும் நில விவகாரங்களை முறையாகச் சீரமைக்க வேண்டும் என பிரகாஷ் கோரிக்கை விடுத்தார்.
இறுதியாக, அரசியல் லாபத்திற்காக இந்த விவகாரத்தைப் பயன்படுத்தி மத ரீதியான வெறுப்புணர்வையோ அல்லது இனவாதத்தையோ தூண்ட வேண்டாம் என எதிர்க்கட்சியினரை அவர் எச்சரித்தார். மலேசியாவின் பன்முகத்தன்மை மற்றும் ஒற்றுமையைக் குலைக்கும் வகையில் சமூக வலைதளங்களில் மேற்கொள்ளப்படும் பரப்புரைகள் ஆபத்தானவை எனக் குறிப்பிட்ட அவர், இது சட்டம் மற்றும் மதத்திற்கு இடையிலான மோதல் அல்ல, மாறாக நிர்வாக ரீதியாகத் தீர்க்கப்பட வேண்டிய ஒரு பரிணாம வளர்ச்சி என்றார். அமைதியையும் சமூக நல்லிணக்கத்தையும் பேணுவதே மக்கள் பிரதிநிதிகளின் முதன்மையான கடமை என்றும் அவர் தனது அறிக்கையில் தெளிவுபடுத்தியுள்ளார்.








