நீலாய் பகுதியில் நேற்று இரவு நடந்த இரண்டு தனித்தனி ஆயுத கொள்ளை சம்பவங்களைத் தொடர்ந்து, ஐந்து சந்தேக நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
முதல் சம்பவமானது அதிகாலை 1.24 மணியளவில், பண்டார் பாரு நீலாய் பகுதியில் ஜாலான் BBN 1/2F-ல் உள்ள 24 மணி நேர கடை ஒன்றில் நடந்ததாக நீலாய் மாவட்ட போலீஸ் தலைவர் ஜோஹாரி யாஹ்யா தெரிவித்துள்ளார்.
மோட்டார் சைக்கிளில் வந்த இருவர், 20 வயது இளைஞரை கத்தியை காட்டி மிரட்டி, சுமார் 600 ரிங்கிட் ரொக்கத்தையும், பல சிகரெட் கார்டன்களையும் கொள்ளையடித்து தப்பியோடியதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இரண்டாவது சம்பவமானது நேற்று இரவு 9.48 மணியளவில் ருமா ரக்யாட் நீலாய் வீடமைப்புப் பகுதியில் நடந்துள்ளது.
மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு அல்லது மூன்று பேர், 50 வயது பெண் ஒருவரை மிரட்டி, அவரிடமிருந்து ரொக்கப் பணம், நகை, வங்கி அட்டை உள்ளிட்டவைகளை கொள்ளையடித்துச் சென்றுள்ளதாகவும் ஜோஹாரி யாஹ்யா தெரிவித்துள்ளார்.
இரு வழக்குகளும் குற்றவியல் சட்டம் பிரிவுகள் 394 மற்றும் 395/397-இன் கீழ் விசாரிக்கப்பட்டு வருகின்றன.








