கோலாலம்பூர், பிப்ரவரி.19-
ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் நிலங்களை "அரசு நிலம்" என இஸ்ரேல் சட்டவிரோதமாகப் பதிவு செய்துள்ளதை மலேசியா வன்மையாகக் கண்டிக்கிறது என்று விஸ்மா புத்ரா தெரிவித்துள்ளது.
"இந்த நிலப்பதிவு நடவடிக்கை, சட்டவிரோதக் குடியேற்றங்களை விரிவுபடுத்துவதற்கும், பாலஸ்தீன நிலப்பரப்பில் சட்டவிரோத ஆக்கிரமிப்பை உறுதிப்படுத்துவதற்கும் இஸ்ரேலியச் சட்டத்தின் கீழ் எடுக்கப்பட்ட ஒரு துணிகர முயற்சியாகும்," என்று விஸ்மா புத்ரா இன்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.
முன்னதாக, கடந்த பிப்ரவரி 15 ஞாயிற்றுக்கிழமை, அன்று இஸ்ரேலியக் குடியேறிகள் மேற்குக் கரையில் நிலங்களை வாங்குவதை எளிதாக்கும் சர்ச்சைக்குரிய முன்மொழிவுக்கு இஸ்ரேலிய அரசாங்கம் ஒப்புதல் அளித்ததாகத் தகவல்கள் வெளியாகின.
இந்த முன்மொழிவு, இஸ்ரேலியத் தனிநபர்கள் மேற்குக் கரையில் நிலங்களை வாங்க அனுமதிப்பதோடு, அந்த நிலப்பரப்பின் நிர்வாகத்தின் ஒரு பகுதியை இஸ்ரேலிய சிவில் அதிகாரிகளிடம் ஒப்படைக்கவும் வழிவகை செய்கிறது.
இருப்பினும், இந்த நடவடிக்கை பாலஸ்தீன நிலத்தைப் பறிப்பதோடு, இணைப்புக் கொள்கையை முன்னெடுப்பதாகவும், நான்காவது ஜெனிவா உடன்படிக்கை மற்றும் ஐநா பாதுகாப்பு கவுன்சில் தீர்மானம் 2334 உள்ளிட்ட சர்வதேசச் சட்டங்களை 1967-க்குப் பிறகு கண்டிராத வகையில் அப்பட்டமாக மீறுவதாகவும் விஸ்மா புத்ரா கூறியுள்ளது.








