வடக்கு-தெற்கு நெடுஞ்சாலையில் சிரம்பான் அருகே மேம்பாலத்திலிருந்து விழுந்த முதியவர் ஒருவர் சொகுசு வாகனம் மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இந்த சம்பவம் இன்று மதியம் சுமார் 12.40 மணியளவில், சிரம்பான், சுங்கை உஜோங் புக்கிட் நனாஸ் மேம்பாலத்தின் கீழே நிகழ்ந்தது. முதற்கட்ட விசாரணையில், 74 வயதுடைய அந்த முதியவர் தனது மோட்டார் சைக்கிளை மேம்பாலத்தின் மேல் நிறுத்திவிட்டு, சுமார் 7 மீட்டர் உயரத்தில் இருந்து கீழே குதித்தது தெரியவந்துள்ளது. அப்போது கோலாலம்பூரிலிருந்து சிரம்பான் நோக்கிச் சென்று கொண்டிருந்த புரோட்டான் X50 ரக வாகனம் எதிர்பாராத விதமாக அவர் மீது மோதியது.
தலையில் பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக சிரம்பான் மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி அஸஹார் அப்துல் ரஹீம் தெரிவித்தார்.
முதியவரின் உடல் பிரேதப் பரிசோதனைக்காக ரெம்பாவ் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் குறித்துத் தகவல் தெரிந்தவர்கள் அருகிலுள்ள போலீஸ் நிலையத்தைத் தொடர்பு கொள்ளுமாறு போலீசார் கேட்டுக்கொண்டுள்ளனர்.








