கோலாலம்பூர், ஆகஸ்ட்.21-
மலேசிய சோஷலிச கட்சியான பிஎஸ்எம்மின் துணைத் தலைவரும், தோட்டப் பட்டாளிகளிள் உரிமைக்காகப் போராடி வருபவருமான எஸ். அருட்செல்வன் கைது செய்யப்பட்டதை பெர்சே உட்பட பல்வேறு அமைப்புகள் கண்டித்துள்ளன.
அருட்செல்வன் கைது செய்யப்பட்டது சட்டவிரோதமானது என்று பெர்சே கூறுகிறது.
மேம்பாட்டிலிருந்து கைவிடப்பட்டு, ஓரங்கட்டப்பட்ட சாமானிய மக்களைப் பாதுகாக்கப் போராடி வரும் அருட்செல்வன் கைது செய்யப்பட்டு இருப்பது, அவர் ஆற்றி வரும் சேவைக்கு விடுக்கப்பட்டுள்ள ஒரு மிரட்டாகும் என்று பெர்சே குறிப்பிட்டுள்ளது.
அருட்செல்வனைத் தடுப்புக் காவலில் வைத்தது போலீஸ் துறையினர் தங்கள் அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தியுள்ளனர் என்பது தெளிவாகிறது.
அருட்செல்வன் கைது செய்யப்படுவதற்கு முன்பு போலீசாரின் விசாரணைக்கு அவர் மிகுந்த ஒத்துழைப்பு நல்கியுள்ளார். இருப்பினும் அந்த போராட்டவாதியைத் தடுப்புக் காவலில் வைத்தது, சட்டத்தை மீறியது அதிகாரத் துஷ்பிரயோகமாகும் என்று பெர்சே வாதிட்டது.
எனினும் மக்கள் பிரச்னைகளுக்காக மிகவும் அமைதியாகப் போராடும் சமூக ஆர்வலர்களைக் கைது செய்ய வேண்டாம் என்று பெர்சே வலியுறுத்தியது. அவ்வாறு கைது செய்யப்படுவது மக்களின் குரலை ஒடுக்குவதற்கு ஒப்பாகும் என்று அது குறிப்பிட்டுள்ளது.
கடந்த ஆகஸ்ட் 13 ஆம் தேதி நாடாளுமன்ற வெளி வளாகத்தில் தோட்டப் பட்டாளிகளுடன் இணைந்து மகஜர் சமர்ப்பிக்கும் நிகழ்வில் போலீசாருடன் நடந்த மோதல் தொடர்பில் அருட்செல்வன் கைது செய்யப்பட்டு கோலாலம்பூர் டாங் வாங்கி மாவட்ட போலீஸ் தலைமையகத்தில் சுமார் 6 மணி நேரம் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டார்.








