சிம்பாங் ரெங்காமில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் உட்பட ஐந்து பேரின் உயிரைப் பறித்த சாலை விபத்து தொடர்பான விசாரணையை கொலை மற்றும் கவனக்குறைவான/ஆபத்தான வாகன ஓட்டத்தால் மரணம் ஏற்படுத்துதல் என்ற பிரிவுகளின் கீழ் வகைப்படுத்துமாறு சட்டத்துறை தலைமை அலுவலகம் போலீசாருக்கு உத்தரவிட்டுள்ளது.
இதனை மலேசிய சட்டத்துறைத் தலைவர் தான் ஸ்ரீ முகமது டுசுகி மொக்தார் உறுதிப்படுத்தியுள்ளார்.
எனினும், இவ்வழக்கில் போலீஸ் விசாரணை அறிக்கையை முழுமையாக ஆய்வு செய்த பிறகே எந்த குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட வேண்டும் என்பது குறித்து இறுதி முடிவு எடுக்கப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
கடந்த திங்கள்கிழமை பிற்பகல் 1.15 மணியளவில் ஜாலான் ரெங்காம்–சிம்பாங் சாலையின் 27-ஆவது கிலோமீட்டரில் நிகழ்ந்த இந்த விபத்தில் ஐந்து வாகனங்கள் சம்பந்தப்பட்டன.
முதற்கட்ட விசாரணையில், 19 மற்றும் 22 வயதுடைய இரு சகோதரர்கள் அதிவேகமாகவும் ஆபத்தான முறையிலும் வாகனம் ஓட்டியதாக தெரியவந்துள்ளது.
அவர்களில் ஒருவரின் பிஎம்டபிள்யூ 530இ கார் கட்டுப்பாட்டை இழந்து டொயோட்டா வயோஸ், புரோட்டான் வீரா மற்றும் பெரோடுவா அல்சா மீது மோதியது.
இதில் டொயோட்டா வியோஸில் பயணித்த ஒரே குடும்பத்தைச் நால்வரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
அவர்கள் மலாக்காவிலிருந்து கோத்தா திங்கி நோக்கி பயணம் செய்து கொண்டிருந்தனர்.
பிஎம்டபிள்யூ வாகனத்தை ஓட்டிய 22 வயது இளைஞர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்தார்.
இதனிடையே, மெர்சிடிஸ் பென்ஸ் ஏ250 காரை ஓட்டிய 19 வயது இளைய சகோதரர் கைது செய்யப்பட்டு இரண்டு நாட்கள் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
அவர் சிங்கப்பூரில் உள்ள ஒரு பல்கலைக்கழகத்தில் கல்வி பயிலும் மாணவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விபத்து மலேசியாவில் மீண்டும் ஒருமுறை ஆபத்தான வாகன ஓட்டம் குறித்த கவலைகளை அதிகரித்துள்ளது.








